கும்பகோணம் காமாட்சி ஜோசியர் தெருவில் உள்ள மின்மாற்றியில் பழுது நீக்க சென்ற மின்வாரிய ஊழியர் வினோத் (31)மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். காவல் துறையினர் மற்றும் மின்வாரிய துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று இரவு கும்பகோணம் காமாட்சி ஜோசியர் தெருவில் உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட பழுது காரணமாக அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்வதற்காக மின்வாரியத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றும் வினோத் சென்றுள்ளார்.
மின் மாற்றியை ஆப் செய்துவிட்டு பழுது நீக்கும் போது மின்சாரம் தாக்கியதில் வினோத் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார் .
இந்த தகவல் மின்வாரிய அலுவலகத்திற்கு தெரிய வரவே, அங்கு வந்த மின் வாரிய பொறியாளர்கள் அந்தப் பகுதியில் உள்ள மின்சாரம் முழுவதையும் நிறுத்திவிட்டு மின்சாரம் தாக்கி இறந்த வினோத்தின் உடலை மீட்டனர்.
நிகழ்வு இடத்திற்கு வந்த காவல்துறையினர் வினோத்தின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கும்பகோணம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மின் இணைப்பை துண்டித்து விட்டு பழுதை சரி செய்யும் போது எவ்வாறு மின்சாரம் தாக்கியது என்பது குறித்து காவல்துறையினரும், மின்வாரிய துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
மின்சாரம் தாக்கி உயிரிழந்த வினோத்தின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழும் காட்சி காண்போரை கண் கலங்க வைத்துள்ளது .
இந்த சம்பவம் கும்பகோணத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
