பார்லி., மழைக்கால கூட்டத்தொடர், வரும் ஜூலை 20ல் தொடங்கி அடுத்த மாதம் ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடக்கும் என டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நான்கு வாரங்கள் நடக்கவுள்ள இந்த கூட்டத்தொடரில், 19 அமர்வுகள் இடம்பெறும். இதில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரையறை தொடர்பான, 131வது அரசியலமைப்பு திருத்த மசோதா உட்பட முக்கிய மசோதாக்களை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.திருத்தப்பட்ட இந்த மசோதாவில், லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளின் உறுப்பினர் எண்ணிக்கையை, 50 சதவீதம் வரை அதிகரிக்கும் வகையிலான அம்சம் இடம்பெற உள்ளதாக தெரிகிறது.
கடந்த ஏப்ரலில், பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பின் நடந்த பார்லி., சிறப்பு கூட்டத்தொடரில், இந்த மசோதாக்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. ‘நீட்’ வினாத்தாள் கசிவு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகளும் திட்டமிட்டுள்ளது. இதனால் கூட்டத்தொடர் முழுவதும் கடும் அமளிக்கு மத்தியில் பரபரப்பான சூழலே நிலவும்.
மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., மற்றும் மஹாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேயின் உத்தவ் சிவசேனா ஆகிய கட்சிகளுக்குள் வெடித்துள்ள உட்கட்சி பூசலுக்கு பின் நடக்கும் முதல் கூட்டத்தொடர் இது. பார்லி.,யில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் உயர்ந்துள்ள நிலையில், இக்கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.’இண்டி’ கூட்டணியிடம் இருந்து தி.மு.க., சற்று விலகி உள்ள நிலையில், கூட்டத்தொடரில், மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுமா அல்லது காங்கிரசுக்கு ஆதரவு கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
