கிருஷ்ணகிரி மாவட்டம் இராயக்கோட்டை அடுத்துள்ள போடம்பட்டி கிராமத்தை சேர்ந்த திமுக விவசாய அணி மாநில துணைச் செயலாளர் அரியப்பன் என்பவரது மகன் அன்பானந்தம் திமுகவின் Gen Z பிரிவு ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார்.
கடந்த ஜூன் 23 ஆம் தேதியன்று முதல்வர் ஜோசப் விஜய், த்ரிஷா உடன் பிறந்தநாள் கொண்டாடியதை விமர்சிக்கும் வகையில் அன்பானந்தம் இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்டிருந்தார். இது தொடர்பான புகாரின் பேரில் அன்பானந்தம் மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில், தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைவதற்காக அன்பானந்தம் தனது வழக்கறிஞர்களுடன் இன்று வந்தார். அப்போது நீதிமன்ற வாசலில் அவரை கைது செய்ய காத்திருந்த போலீசாருடன், அன்பானந்தம் தரப்பு வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அன்பானந்தத்தை நீதிமன்றத்திற்கு உள்ளே அனுமதித்தனர்.
நீதிமன்றத்தில் சரணடைந்த அன்பானந்தத்தை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு அன்பானந்தம் தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நீதிபதி ஒரு நாள் காவலில் விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கினார்.
இது தொடர்பாக அன்பானந்தத்தின் வழக்கறிஞர் அலீம் அல்புகாரி தெரிவிக்கையில், “சமூக வலைத்தளங்களில் வரக்கூடிய தகவல்களை வைத்து வழக்குப் பதிவு செய்யக்கூடாது என ஆந்திர நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை சுட்டிக்காட்டி உள்ளோம். அதையும் மீறி வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். தமிழக வெற்றிக்கழக அரசு இளைஞர்களை ஒடுக்க வேண்டும், நசுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இது போன்ற செயலில் ஈடுபட்டு வருகிறது” என்றார்.
