திருச்செந்தூரில் வீட்டின் மொட்டை மாடியைத் தூய்மைப் படுத்தியபோது, கைப்பிடிச் சுவர் இல்லாத பகுதியிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கீழ ரத வீதியைச் சேர்ந்தவர் ராமநாதன் (64). இவருக்குத் திருமணமாகாததால், தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று ராமநாதன் தனது வீட்டின் மொட்டை மாடியில் தேங்கியிருந்த குப்பைகளைத் துப்புரவு செய்வதற்காக மேலே சென்றுள்ளார்.
மாடியைச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, கைப்பிடிச் சுவர் இல்லாத ஒரு பகுதியில் ஏறி குப்பைகளை அப்புறப்படுத்த முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறிய ராமநாதன், மாடியிலிருந்து கீழே விழுந்தார். இதில் அவரது தலையின் பின்பகுதியில் பலத்த அடிபட்டு இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில், திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
