கோவை மாநகராட்சி கூட்டத்தில் திமுக – காங்கிரஸ் கவுன்சிலர்களிடையே மோதல்
கோவை மாநகராட்சி கூட்டத்தின் போது, செம்மொழிப் பூங்கா அமைப்பதில் ரூ. 40 கோடி அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் பெண் கவுன்சிலர் குற்றம் சாட்டியதால், ஆளும் தரப்பான திமுக கவுன்சிலர்களுக்கும் அவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, பெரும் பரபரப்பு நிலவியது.
கோவை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் நகரின் வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் கவுன்சிலர் ஒருவர், கோவை செம்மொழிப் பூங்கா அமைக்கும் பணிகளில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி திடீரென முழக்கங்களை எழுப்பினார்.
பூங்கா அமைக்கும் ஒப்பந்தப் பணிகளில் சுமார் ரூ. 40 கோடி அளவிற்கு ஊழல் நடந்துள்ளதாகத் தெரிவித்த அவர், இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். செம்மொழிப் பூங்கா குறித்து காங்கிரஸ் கவுன்சிலர் அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்ததால், அவையிலிருந்த திமுக கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.திமுக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், அவையில் பெரும் அமளி ஏற்பட்டது. அந்த நேரத்தில், திமுக கவுன்சிலர்கள் தன்னை கீழே தள்ளிவிட்டதாக காங்கிரஸ் பெண் கவுன்சிலர் குற்றம் சாட்டியது நிகழ்வின் தீவிரத்தை அதிகரித்தது. இதனால் மாநகராட்சி கூட்ட அரங்கம் போர்க்களம் போலக் காட்சி அளித்தது.
