திருவள்ளூர்: அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி திருவள்ளூர் அருகே வந்துக்கொண்டு இருந்த புறநகர் ரயில் என்ஜினில் திடீரென புகை வந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. ரயில்கள் பாதியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து திருவள்ளூர் வழியாக சென்னை நோக்கி புறநகர் மின்சார ரயில் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது.
அப்பொழுது, செவ்வாய்பேட்டை அருகே சென்றபோது, திடீரென ரயில் என்ஜினில் இருந்து லேசான புகை வெளியேறியுள்ளது. அதிர்ச்சியடைந்த ரயில் ஓட்டுநர் பதற்றத்துடன் உடனடியாக புறநகர் மின்சார ரயிலை செவ்வாய்பேட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தினார். இதனால், அரக்கோணத்தில் இருந்து திருவள்ளூர் மார்க்கமாக சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
இதனையடுத்து, ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த, தகவலின்பேரில் ரயில்வே பொறியியல் பிரிவு தொழில்நுட்ப அலுவலர்கள் விரைந்து சென்று, என்ஜினில் ஏற்பட்டுள்ள பழுதினை சீர்செய்தனர். இதனைத்தொடர்ந்து அரக்கோணத்தில் இருந்து திருவள்ளூர் வழியாக சென்னை சென்ட்ரலுக்கு புறநகர் மின்சார ரயில்கள் வழக்கம்போல் சீராக இடைவெளியின்றி இயக்கப்பட்டன. இந்த சம்பவத்தால் அரக்கோணத்தில் இருந்து திருவள்ளூர் வழியாக சென்னை சென்ட்ரலுக்கு செல்லும் மார்க்கத்தில் 30 நிமிடங்களுக்கும் மேலாக புறநகர் மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
