கொலை முயற்சி வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபர்கள் இருவரைப் பெங்களூரில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி மேல சண்முகபுரத்தைச் சேர்ந்த ராமஜெயம் மகன் பொன்துரை (24), ஏரல் வடக்கு பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த சிராஜுதீன் மகன் தஸ்லீம் அலி (30). தனித்தனி கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய இவர்கள் இருவரும் நீதிமன்ற விசாரணைகளுக்கு ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, இருவருக்கும் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது. பிடியாணை பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காவல் உதவி ஆய்வாளர் சுந்தரம் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது இருவரும் கர்நாடக மாநிலம் பெங்களூரில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அங்கு விரைந்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
பொன்துரை தூத்துக்குடி சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணைக்குப் பின் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டு, அவர் விடுவிக்கப்பட்டார். தஸ்லீம் அலி தூத்துக்குடி மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிபதி உத்தரவின்படி பேரூரணி கிளையமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
