நடிகர் விஜய் கட்சிக்கு இவ்வளவு பாதுகாப்பற்ற எண்ணம் கூடாது: கார்த்தி சிதம்பரம் பேட்டி!
நடிகர் விஜய் தலைமையிலான ஆட்சி அமைந்த பின்னர், அதிமுகவில் இருந்து 6 பேர் ராஜினாமா செய்துவிட்டு விஜய் கட்சியில் இணைந்தனர்.
இந்நிலையில், ”இன்னும் 10 பேர் எங்கள் நடிகர் விஜய் கட்சியில் இணையவுள்ளனர். மீதி உள்ளவர்களும் இன்னும் 6 மாதங்களில் வந்து விடுவார்கள்” என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார்.
இதுதொடர்பாக விருதுநகரில் இன்று (ஆகஸ்ட் 24) செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்தி சிதம்பரம் , ”விஜய் கட்சி பாதுகாப்பற்ற எண்ணத்தோடு இருக்கக் கூடாது. இந்த அரசாங்கம் 5 வருஷம் நடக்கும். இவர்களுக்கு கூடுதலாக எந்த எம்.எல்.ஏ.வும் தேவையில்லை. விஜய்க்கு 106 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். மற்றக் கட்சியில் இருந்து 11, 12 பேர் ஆதரவு கொடுத்திருக்கிறார்கள்.
இவர்களை தவிர்த்துவிட்டு யாரும் அரசாங்கம் அமைக்கப்போவதில்லை. எனவே இவர்களுக்கு பாதுகாப்பற்ற எண்ணம் வேண்டாம்.
இதுதவிர மற்றக் கட்சியில் இருந்து எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்துவிட்டு, இடைத்தேர்தலுக்காக இவர்கள் கட்சியில் சேர்வதை வன்மையாக கண்டிக்கிறேன். எதிர்க்கிறேன். அது தேவையே கிடையாது.
என்னை பொறுத்தவரைக்கும் இது தொகுதி மக்களுக்கு நடக்கும் அநீதியாகத்தான் பார்க்கிறேன். இதை வந்து நான் ஏற்றுக்கொள்ளவே இல்லை. இது அவர்களுக்கு தேவையும் இல்லை.
தேர்தல் நடந்து 3 மாதத்துக்குள் ஒரு சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா செய்துவிட்டு, இன்னொரு கட்சியில் சேர்ந்து இடைத்தேர்தலை சந்திப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அவர்களுக்கு சீட் கொடுக்கவும் கூடாது. அதை நான் வன்மையாக நிராகரிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
