நாடு முழுவுதும் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் சுமார் 59% அளவுக்கு வெங்காயத்தின் விலை உயர்ந்து காணப்படுகிறது. இந்த சூழலில் வெங்காய தட்டுப்பாட்டை தடுக்கும் விதமாக வெங்காயத்தை சரக்கு ரயில்கள் மூலம் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களுக்கு அனுப்பும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், தேவையைச் சமாளிக்கவும் மத்திய அரசு ‘வெங்காய எக்ஸ்பிரஸ்’ (Kanda Express) என்ற பெயரில் பிரத்யேக சரக்கு ரயில்களை இயக்கும் பணியைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் சில்லறைச் சந்தைகளில் வெங்காய வரத்தை உயர்த்தி விலையை குறைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டு உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் உள்ள முக்கிய உற்பத்தி மையங்களிலிருந்து வெங்காயம் நாட்டின் முக்கிய நகரங்களுக்கு ஏற்றிச் செல்லப்படுகிறது. சென்னை, மதுரை, டெல்லி, எர்ணாகுளம் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு வெங்காயம் சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்படுகிறது. இந்த நடவடிக்கை தொடர்பாக விளக்கம் அளித்துள்ள நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் சந்தையில் வெங்காயத்தின் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து, விநியோகத்தைச் சீராகப் பராமரிக்க வெங்காய எக்ஸ்பிரஸ் நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறியுள்ளது.
