திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள போலீஸ் குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் வைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அரசு பேருந்து சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு போலீஸ் குடியிருப்பு பகுதியில் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் செல்போன் டவர் அமைக்க பணிகள் துவங்கியது.
இந்நிலையில் இந்த பகுதியில் செல்போன் டவர் அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து

அப்பகுதி குடியிருப்பு வாசிகள் முதலமைச்சரின் தனிப்பிரிவு மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து துறையினருக்கு புகார் மனு அளித்துள்ளனர்.
இதில் எவ்வித நடவடிக்கையும் இல்லாத நிலையில்
செல்போன் டவர் அமைக்கும் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் ஆணை பெற்று அதற்குரிய பணிகளை ஆரம்பித்தது. இந்நிலையில் 40 வருடத்திற்கு மேலான பழுதடைந்த கட்டிடத்தில் செல்போன் டவர் அமைப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும், குடியிருப்பு பகுதியில் செல்போன் அமைக்க கூடாது என வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஐ டி பார்க் சாலையில் அரசு பேருந்து சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் வருவாய்த் துறையினர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என போலீசார் கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
