செங்கல்பட்டு தாலுகா, திருப்போரூர் ஊராட்சி ஒன்றியம், நெம்மேலி கிராமத்தில், கடந்த 2009ம் ஆண்டு முதல், 7,709 சதுர அடி நிலத்தில் செயல்பட்டு வரும் இந்த காப்பகம், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ராஜிவ்காந்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்படும் தெருநாய்கள் மற்றும் பூனைகளுக்கு சிகிச்சை மற்றும் நிரந்தர பராமரிப்பு அளித்து வருகிறது.
இந்த காப்பகம் வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்று வந்த நிலையில், 2024-25 நிதியாண்டுடன் அந்த நிதியுதவி நிறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து ஜூன் 4ம் தேதி சென்னை மாநகராட்சிக்கு கடிதம் எழுதிய ஜெயந்தி, காப்பகம் அமைந்துள்ள நிலம் மற்றும் கட்டிடங்களை எந்தவித நிதி பரிவர்த்தனையும் இல்லாமல் மாநகராட்சிக்கு வழங்க விருப்பம் தெரிவித்துள்ளார். தற்போது காப்பகத்தில் சுமார் 250 நாய்கள் மற்றும் 80 பூனைகள் பராமரிக்கப்பட்டு வருவதால், அவற்றுடனேயே காப்பகத்தை மாநகராட்சி ஏற்று நடத்தவும் கோரப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பொதுநிறுவன வளாகங்களில் இருந்து அகற்றப்படும் தெருநாய்களுக்கு கருத்தடை மற்றும் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்திய பிறகும் அதே இடத்தில் மீண்டும் விடாமல், அங்கீகரிக்கப்பட்ட காப்பகங்களில் பராமரிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கூடுதல் காப்பக வசதி தேவைப்படுவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மணலி மற்றும் பெருங்குடி மண்டலங்களில் தலா 250 நாய்களைப் பராமரிக்கும் இரண்டு காப்பகங்கள் அமைக்கப்பட்டு வரும் நிலையில், ஜெயந்தி டெய்சி காப்பகத்தையும் மாநகராட்சி நிர்வாகத்தில் கொண்டு வருவது கூடுதல் வசதியை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட நடைமுறைகள் முடிந்த பிறகு நிலம் மற்றும் கட்டடங்களை நன்கொடையாகப் பெற்று மாநகராட்சி காப்பகத்தை நிர்வகிக்கவும், ‘ஜெயந்தி டெய்சி விலங்குகள் காப்பகம்’ என்ற தற்போதைய பெயரையே தொடரவும் மாமன்ற அனுமதி கோரப்பட்டுள்ளது.
