ஊருக்குள் வழிதவறி வந்த எறும்புத் திண்ணி” ; கோவையில் பத்திரமாக மீட்டு வனக்காவலரிடம் ஒப்படைப்பு – வனப்பகுதிக்குள் மீண்டும் விட வனத்துறை நடவடிக்கை!
கோவை, மருதமலை வனப்பகுதியை அடுத்து உள்ள கஸ்தூரி நாயக்கன்பாளையம் கிராமத்திற்குள் வழி தவறி வந்த எறும்புத் திண்ணியை எந்தவொரு காயமுமின்றி உயிருடன் மீட்டனர்.
கோவை, மருதமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட கஸ்தூரி நாயக்கன்பாளையம் குடியிருப்புப் பகுதிக்குள் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து எறும்புத்திண்ணி ஒன்று உணவைத் தேடி வழிதவறி வந்து உள்ளது.
அரிதான இந்த உயிரினம் குடியிருப்புப் பாதையில் உலா வருவதைக் கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக இதுகுறித்து வன உயிரினப் பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழுவிற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர், அந்த எறும்புத்திண்ணிக்கு எவ்வித பாதிப்பும் அச்சுறுத்தலும் ஏற்படாத வகையில் மிகவும் பாதுகாப்பான முறையில் மீட்டனர்.
மீட்கப்பட்ட எறும்புத்திண்ணி உடனடியாக மருதமலை பகுதி வனக்காவலர் சரவணகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
எறும்புத் திண்ணியின் உடல்நிலையைப் பரிசோதித்த வனத்துறை அதிகாரிகள், அதனை மருதமலை அடர்ந்த வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக கொண்டு சென்று விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
