கரூர் மாவட்டம், மோளக்கவுண்டனூர் பகுதிகளில் நிலவி வரும் கடுமையான குடிநீர் கட்டுப்பாட்டிற்கு நடவடிக்கை எடுக்க கோரி, அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட கலெக்டர்
அலுவலகத்தில் காலி குடங்களுடன் மனு அளித்தனர்.
மோளக்கவுண்டனூர் பகுதியில் குடிநீர் வழங்கி வந்த இரண்டு போர்வெல்களும் அடுத்தடுத்து பழுதடைந்ததால், கடந்த ஒரு வாரமாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனவும். இதனால் குடிநீரின்றி சமையல் செய்வதற்கும், கால்நடைகளுக்கு தண்ணீர்

வழங்குவதற்கும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், அத்தியாவசிய தேவைக்காக கடைகளில் கேன் குடிநீர் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும்,
குடிநீர் பிரச்சினை குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும்,நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
மேலும், தாடிகாரஞ்சூர் பகுதியில் நடைபெற்று வரும் பாலம் கட்டுமானப் பணியால் காவிரி குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், ஜெகதாவி பகுதியில் இருந்து வரும் குடிநீரை சிலர் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக சட்டவிரோதமாக மறித்து பயன்படுத்துவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
எனவே, உடனடியாக லாரிகள் மூலம் குடிநீர் வழங்குவதுடன், பழுதடைந்த போர்வெல் மோட்டார்களை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து, சீரான குடிநீர் விநியோகத்தை வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பொதுமக்களை திரட்டி பேருந்து மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
