தூத்துக்குடி அருகே முடிவைத்தானேந்தலில் பெண் வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் காவலர் முத்துக்குமார் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி அருகே முடிவைத்தானேந்தல் கிராமத்தில் பிரியா என்னும் பெண் ஜெராக்ஸ் (Xerox) கடை நடத்தி வருகிறார். இவரது சகோதரி முத்து லட்சுமி கடைக்கு வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த காவலர் முத்துக்குமார் என்பவர்பிரியாவின் தங்கையான முத்துலட்சுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. காவலர் முத்துக்குமார் தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் காவல் நிலையத்தில் பணிபுரிகிறார்.
இந்நிலையில் பிரியாவின் தங்கையான முத்துலட்சுமியிடம் அவரது நகையை வாங்கி அடமானம் வைத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த நகையை திருப்பி தருமாறு முத்துகுமாரிடம் கேட்டுள்ளனர். முத்துக்குமார் அந்த நகையை திருப்பி தருவதற்கு காலதாமதம் செய்து வந்த நிலையில் நேற்று இரவு பிரியா நடத்தி வரக்கூடிய ஜெராக்ஸ் கடையில் முத்துக்குமார் வந்தார். மேலும் முத்துக்குமாருக்கும் பிரியாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் ஆத்திரமடைந்த காவலர் முத்துக்குமார், அருகே இருந்த கம்பியால் அடித்தும் அரிவாளால் வெட்டியும் பிரியாவைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இதுகுறித்து புதுக்கோட்டை காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்படவே, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சம்பவ இடத்திலேயே பிரியா உயிரிழந்ததை அறிந்த காவல்துறையினர், முத்துக்குமாரைக் கைது செய்ய முயன்றபோது அவர் தலைமறைவாகியிருப்பது தெரியவந்தது.
மேலும் இறந்த பிரியாவின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட போலீசார் தற்போது இன்று காலை முத்துக்குமாரை முடிவைத்தானேந்தல் பகுதியில் பதுங்கி இருப்பது கண்டறிந்து அவரை கைது செய்து தற்போது விசாரணை செய்து வருகின்றனர்.
