சட்டமன்ற உறுப்பினர்களின் மறைவு அல்லது ராஜினாமா காரணமாகக் காலியாகும் தொகுதிகளுக்கு இந்தியத் தேர்தல் ஆணையத்தால் இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும், பொதுத்தேர்தல் வரவிருக்கும் குறுகிய காலத்தில் இடைத்தேர்தல்களை நடத்துவது அரசு நிதியின் விரயத்திற்கும், தேர்தல் நடத்தை விதிகளால் வளர்ச்சிப் பணிகள் முடங்குவதற்கும் வழிவகுப்பதாகக் கூறி அவ்வப்போது சட்டப் போராட்டங்கள் தொடுக்கப்பட்டு வருகின்றன.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல வழக்கில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இடைத்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளைத் தேர்தல் ஆணையம் உரிய முறையில் வகுக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. மேலும், மாநிலத்தில் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்ட 7 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல்களுக்காகச் செய்யப்பட்ட செலவினங்கள் குறித்தும், அது தொடர்பான முழுமையான தணிக்கை அறிக்கைய நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
