பிக் பாஸ் நிகழ்ச்சியில் தலைமைப் பண்பு குறித்து நடிகர் சேதுபதி பேசியது சர்ச்சையான நிலையில், இது தொடர்பாக விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி கடந்த செப். 6 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விஜய் சேதுபதியே இந்த புதிய சீசனையும் தொகுத்து வழங்குகிறார்.
கடந்த சனிக்கிழமை ஒளிபரப்பான நிகழ்ச்சியில் ஷாதிகா தலைவர் பதவி குறித்து பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “தலைவர் என்றால் என்னவென்று தெரியாமல், தலைமையின் பொறுப்பை உணராமல், வாக்குறுதிகளை அள்ளிகொடுத்துவிட்டு, பிரச்னைகள் வரும்போது, எதிரணி மீது பழிபோட்டு ஓடுவது, தலைமைப் பண்புக்கான தகுதி கிடையாது. அது ஏமாற்று வேலை.
நாற்காலி என்பது எல்லார் வீட்டிலேயும் இருக்கும், அது கிடைக்கும்போது அதிகாரம் வரும், அதுதான் போதை” என்றார்.
நடிகர் விஜய் சேதுபதி பேசியது இணையத்தில் வைரலானது. அவர் பேசியதற்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக ஊடகங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இது குறித்து விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், தெரிவித்திருப்பதாவது:
”பிக் பாஸ் 10 நிகழ்ச்சி பொழுதுபோக்குக்காக நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சி. இதில் வழக்கமான விதிகள், வடிவம், கருப்பொருள்கள் ஆகியவை விளையாட்டு சூழலை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும்.
நிகழ்ச்சியில் நடக்கும் சம்பவங்கள், போட்டியாளர்களின் பேச்சுகள், கருத்துகள் மற்றும் அவர்களுக்கிடையே ஏற்படும் பிரச்னைகள் அனைத்தும் போட்டியின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும்.
இந்த நிகழ்ச்சியில் குறிப்பிடும் கருத்துகள் அல்லது சம்பவங்களை, வெளியே இருக்கும் எந்தவொரு தனிநபர், அல்லது அமைப்பு போன்றவற்றை குறித்து, கருத்து தெரிவிப்பதாகவோ கருதக்கூடாது. இந்நிகழ்ச்சியில் நடப்பதை அனைத்தையும் பொழுதுபோக்கு நோக்கத்துடன் மட்டுமே புரிந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
