நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டி எடுக்கிறது. அத்துடன் பல மாநிலங்களில் அனல் காற்றும் வீசுகிறது. பல நகரங்களில் பகல்நேர வெப்பநிலை 40 டிகிரியை எட்டியிருக்கிறது. தலைநகர் டில்லியை பொறுத்தவரை 2-வது நாளாக நேற்றும் அனல் காற்று வீசியது. அங்கு இயல்பான அளவை விட 5 டிகிரி வெப்பநிலை அதிகரித்து இருந்தது. இதைப்போல பஞ்சாப், அரியானா மாநிலங்களில் 40 டிகிரி செல்சியசுக்கு மேலே வெப்பநிலை சென்றது. ராஜஸ்தானின் சுருவில் நிலவிய 42.2 டிகிரி செல்சியஸ் வெப்பத்தால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர். கிழக்கு இந்தியா மற்றும் வடகிழக்கு பிராந்தியங்களில் அடுத்த 4 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இவ்வாறு வாட்டி எடுக்கும் வெப்பமும், அனல் காற்றும் மக்களை பெரும் அவஸ்தைக்கு ஆளாக்கி உள்ளது. இதனால் அவர்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். நாளுக்கு நாள் அதிகரிக்கும் பகல் நேர வெப்பநிலையால், திரிபுரா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்கள் கல்வி நிறுவனங்களை மூடியிருப்பது குறிப்பிடத்தக்கது. வெயில் கொடுமையால் மத்தியான வேளைகளில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாக உள்ளது. வயதானவர்களை சாலைகளில் பார்க்க முடிவதில்லை.
வெயிலை சமாளிக்கும் வகையில் சாலையோரங்களில் இளநீர், தர்பூசணி, நுங்கு, வெள்ளரிக்காய், பதநீர் போன்ற பானங்கள் விற்பனை மும்முரமாக நடக்கிறது. எத்தனை பானங்கள் குடித்தாலும் வெயிலில் சிறிது தூரம் செல்ல முடியவில்லை என்று சொல்லும் அளவுக்க இப்போது வெயில் உச்சத்தை தொட்டுள்ளது.