தீபாவளி பண்டிகை வரும் 12ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பட்டாசு, ஜவுளி வியாபாரம் படுஜோராக நடைபெற்று வருகிறது. அனைத்து பகுதிகளிலும் இதற்காக தற்காலிக பட்டாசு கடைகள் திறக்கப்பட்டு புதிய ரகங்கள் கொண்டு வந்து குவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் விற்பனை தற்போது களைக்கட்ட ஆரம்பித்துள்ளது.
ஆன்லைனிலும் பட்டாசு விற்பனை வேகமாக நடைபெற்று வருகிறது. அனைத்து தரப்பு மக்களாலும் ஆவலுடன் எதிர்பார்க்கும் தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் இப்போது இருந்தே பட்டாசு சத்தம் கேட்க தொடங்கிவிட்டது. பட்டாசுகளை வெடிக்க சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் உள்ளனர். பல கிராமங்களில் சிறுவர்கள் தற்போதே பட்டாசுகளை கொளுத்தி மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இதனால் பெற்றோர் தங்கள் குழந்தைகள் மகிழ்ச்சி அடைய வேண்டும். சந்தோஷ மாக இருக்க வேண்டும் என்பதற்காக பட்டாசுகளை இப்போதே வாங்க தர தொடங்கிவிட்டனர்.
இதை பயன்படுத்தி கொண்டு சிலர் போலியான இணையதளங்களை உருவாக்கி குறைந்த விலையில் பட்டாசு தருவதாக கூறி ஆன்லைனில் புதிய மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இணையதளங்களில் வெளியாகும் 90 சதவீத சலுகை விலையில் பட்டாசுகள் விற்பனை போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் பணத்தை இழந்து வருகின்றனர்.
தஞ்சை மாவட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகிறது. அதுவும் தற்போது பட்டாசு விற்பனை தொடர்பாக ஆன்லைன் மோசடி அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. தினமும் 5க்கும் மேற்பட்ட புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஆன்லைன் மூலம் பட்டாசுகள் வாங்கும் மக்களுக்கு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.