டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் பிரசித்தி பெற்றது திருச்சி அடுத்த பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு. ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் தினத்தில் இங்கு ஜல்லிக்கட்டு நடைபெறும். அந்த வகையில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது- சூரியூர் ஸ்ரீ நற்கடல் குடி கருப்பணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு இந்த ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது.
இதில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 750 ஜல்லிக்கட்டு காளைகளும் 550மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். போட்டியை காலை 7 மணிக்கு திருச்சி கோட்டாட்சியர் பார்த்திபன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முதலில் ஸ்ரீ நற்கடல் குடி கருப்பண்ணசாமி கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. வழக்கப்படி கோவில் காளையை யாரும் பிடிக்கமாட்டார்கள். அதன் பிறகு முறையாக ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டு வருகிறது . சீறிப்பாய்ந்த காளைகளை மடக்கி வீரர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பல காளைகளை வந்து பார், வா, வா …. என வீரர்களிடம் சவால் விட்டு கெத்து காட்டி நின்ற காட்சி பார்வையாளர்களை பரவசம் கொள்ளச்செய்தது.
போட்டியில் அடங்க மறுக்கும், காளைகளுக்கும், காளைகளை அடக்கிய ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும் டிவி, மிக்ஸி, கிரைண்டர், சைக்கிள், கட்டில், பீரோ, தங்க காசு, வெள்ளி காசு, ரொக்கம் என ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் அதிக காளைகளை அடக்கும் வீரருக்கும் சிறந்த காளைக்கும் டூவிலரும், இரண்டாவது பரிசாக வீட்டுமனையும் வழங்கப்படுகிறது.
முன்னதாக கால்நடை இணை இயக்குனர் மும்மூர்த்தி தலைமையிலான கால்நடை மருத்துவ குழுவினர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளுக்கு போதை மருந்து கொடுக்கப்பட்டுள்ளதா ஜல்லிக்கட்டு போட்டிக்கு கலந்து கொள்வதற்கு உரிய தகுதி உள்ளதா என்பதை ஆய்வு செய்தனர். அதன் பிறகு ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் திருவெறும்பூர் வட்டார மருத்துவ அலுவலர் பார்த்தசாரதி தலைமையிலான மருத்துவ குழுவினர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் போதை பொருட்கள் உட்கொண்டு உள்ளார்களா என்றும் பரிசோதித்து வருகிறார்கள். திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையில் சுமார் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியை சூரியூர் மற்றும் அதை சுற்றி உள்ள ஊர்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு களிக்கும் விதமாக கேலரிகள் மற்றும் தடுப்பு வேலியை ஜல்லிக்கட்டு விழா குழுவினர் செய்துள்ளனர்.
டாக்டர் பார்த்தசாரதி தலைமையிலான மருத்துவ குழுவினர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் போதை பொருட்கள் உட்கொண்டு உள்ளார்களா என்பதை பரிசோதித்து சான்றிதழ் கொடுக்கிறார்கள். அதன் பிறகே வீரர்கள் களத்தில் இறக்கப்பட்டனர். முதல் சுற்று விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தபோது ஒரு காளை சீறிப்பாய்ந்தது. அதனை யாரும் பிடிக்காததால் காளை பேரிகாட்டில் முட்டி தள்ளியது. அப்போது அங்க பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து எஸ்.ஐ. சுரேஷ் (52) கீழே விழுந்து படுகாயமடைந்தார். உடனடியாக அவருக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.
திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையில் சுமார் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.இந்த ஜல்லிக்கட்டு போட்டியை சூரியூர் மற்றும் அதை சுற்றி உள்ள ஊர்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு களிக்கும் விதமாக கேலரிகள் மற்றும் தடுப்பு வேலியை அருகில் வாகனங்களை பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் சார்பில் நிறுத்தப்பட்டுள்ளது. திருச்சி, தஞ்சை , புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள், பார்வையாளர்கள் பெருமளவில் வந்து உள்ளனர். இதனால் சூரியூர் விழாக்கோலம் பூண்டுள்ளது.