திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வந்த பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் கடந்த ஆண்டு அரசு கல்லூரிகளாக தமிழக அரசால் மாற்றம் செய்யப்பட்டது. ஆனாலும் அதில் பணியாற்றுபவர்களுக்கான ஊதியத்தை அக்டோபர் மாதம் வரை பல்கலைக்கழக நிர்வாகம் வழங்குமாறு அரசு தெரிவித்திருந்தது, இந்நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் கடந்த அக்டோபர் மாதம் வரை ஊதியம் வழங்கிய நிலையில், தொடர்ந்து ஊதியம் வழங்குமாறு பல்கலைக்கழகத்தை தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு கேட்டுக்கொண்ட நிலையில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் நிதி சுமையை காரணம் காட்டி அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்ட பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் பணியாற்றுபவர்களுக்கு ஊதியம் தரவில்லை. இப்படி கடந்த 5 மாதங்களாக ஊதியம் வாங்காத ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசு தங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கி பிரச்சனையை சரி செய்ய வேண்டும், மேலும் அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்ட கல்லூரிகளில் பணியாற்றுபவர்களுக்கான ஊதியத்தை தமிழக அரசே வழங்க வேண்டும் என வலியுறுத்தி பல்கலைக்கழகத்தில் பணியாற்றுபவர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர். இவ்வாறாக இரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.