திருவள்ளூர் அடுத்த பூண்டிஜெயராம் தெருவை சேர்ந்தவர் ஆகாஷ்(26). இவர் திருவள்ளூரில் உள்ள துணிக் கடையில் பணியாற்றி வருகின்றனர். புல்லரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மோனிகா (25) என்பவரை காதலித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. மோனிகா வேலைக்கு செல்லவில்லை. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இரவு நேரத்தில் புழுக்கம் அதிகமாக இருந்துள்ளது. இதனால் வீட்டிற்கு ஏ.சி. வாங்கவேண்டும் என்று மோனிகா கேட்டபோது தம்பதி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு ஆகாஷ், அவரது தம்பி அவினாஷ், அவரது பெற்றோர் ஆகியோர் புழுக்கம் அதிகமாக இருந்ததால் வீட்டின் மொட்டை மாடியில் தூங்கச்சென்றுள்ளனர். மோனிகா அறையிலேயே தூங்கியதாக தெரிகிறது.
இன்று அதிகாலையில் ஆகாஷ் எழுந்து வந்து பார்த்தபோது படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் மோனிகா புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் புல்லரம்பாக்கம் போலீசார் சென்று மோனிகா சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
