தேசிய அளவில் நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுகளுக்கு எதிராக மாணவர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், திரைத் தயாரிப்பாளரும் இயக்குனருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் மாணவர்களுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். நீட் முறைகேட்டுக்கு எதிராகக் குரல் கொடுத்து வரும் மாணவர்களுடன் தாம் தோளோடு தோள் நிற்பதாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மாணவர்களின் குரல்கள் மரியாதையுடன் கேட்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் எழுந்த முறைகேடு புகார்கள் மற்றும் வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. இதைக் கண்டித்தும், தேர்வு அமைப்பில் வெளிப்படைத்தன்மையைக் கோரியும் டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் மாணவர்கள் அமைதி வழியில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
மாணவர்களின் இந்தத் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துத் திரைப்படத் தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நீட் முறைகேட்டுக்கு எதிராகப் போராடும் மாணவர்களுக்குத் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்த அவர், ஒவ்வோர் இளம் மாணவருக்கும் தன்னம்பிக்கை, நியாயம் மற்றும் நம்பிக்கையை அளிக்கும் நேர்மையான கல்வி முறை கிடைக்க வேண்டும் என வலியுறுத்தினார். அத்தகைய நேர்மையான எதிர்காலத்தை உருவாக்க அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
