Skip to content

கரூர் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் போதை ஆசாமி சில்மிஷம்..

கரூர் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தில் பள்ளி, கல்லூரிகள், பணி முடிந்து வீடு திரும்புவோர் அதிகமாக செல்வதால் பேருந்து நிலையத்திற்கு உள்ளேயும், வெளியிலும் பரபரப்பாக காணப்படும். குறிப்பாக ஜவகர் பஜாரில் இருந்து கோவை சாலையை இணைக்கும் பேருந்து நிலைய ரவுண்டானா, மனோகரா கார்னர் ஆகிய பகுதிகள் பொதுமக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும்.

இந்த நிலையில் ஜவஹர் பஜார் வழியாக வந்த போதை ஆசாமி ஒருவர் பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்த இளம் பெண் ஒருவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த இளம் பெண் போதை ஆசாமியை திட்ட ஆரம்பித்தார். உடனடியாக அங்கிருந்த இளைஞர்களும், பொதுமக்களும் அந்த போதை ஆசாமியை பிடித்து தர்ம அடி கொடுத்து உட்கார வைத்துவிட்டு, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதேபோல் பேருந்து நிலைய ரவுண்டானா சிக்னல் அருகில் மது போதையில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் தாறுமாறாக வாகனத்தை இயக்கி, பொதுமக்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்த இருந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு, ஆட்டோவை மடக்கிப்பிடித்து ஆட்டோ ஓட்டுனரை கீழே இறங்கச் சொல்லி தர்ம அடி கொடுத்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பெயரில் அங்கு வந்த கரூர் நகர காவல் நிலைய போலீசார் இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட போதை ஆசாமி மற்றும் மது போதையில் வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்த இருந்த ஆட்டோ ஓட்டுனர் ஆகிய இருவரையும் விசாரணைக்காக அழைத்து சென்றனர். மாலை நேரத்தில் கரூர் பேருந்து நிலையம் அருகில் மது போதை ஆசாமிகளால் அடுத்தடுத்து நடந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த இரு வேறு சம்பவங்களையும் அங்கிருந்த பொதுமக்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.

error: Content is protected !!