தமிழ்நாடு கவர்னர் ரவி, நேற்று இரவு திடீரென அமைச்சர் செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்வதாக உத்தரவிட்டார். அந்த உத்தரவில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்குகள் இருப்பதால் அவரை நீக்கி இருப்பதாக கூறி இருந்தார். ஆனால் சில மணி நேரத்தில் அந்த உத்தரவை வாபஸ் பெற்றார்.
மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் உள்ள 34 அமைச்சர்கள் மீது வழக்குகள் உள்ளன. இவர்களில் பல அமைச்சர்கள் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட கிரிமினல் வழக்குகளும் உள்ளன. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கவர்னர் நீக்கி இருப்பது இந்திய அரசியலில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நேற்று இரவு சென்னையின் பல்வேறு இடங்களில் கவர்னருக்கு உண்மை நிலவரத்தை உணா்த்தும் வண்ணம் கிண்டிக்கு ஒரு கேள்வி? என்ற தலைப்பிட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர் ஹேமந்த் அண்ணாதுரை சார்பில் அந்த சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:
கொலை, கொள்ளை, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்தல் உள்ளிட்ட கடும் குற்ற வழக்குகளை சந்தித்து வரும் 34 ஒன்றிய அமைச்சர்களை பதிவியிலிருந்து விலக்கச் சொல்லி டில்லிக்கு கடிதம் எழுதுவீங்களா கிண்டி? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதில் குற்ற வழக்குகள் உள்ள சில அமைச்சர்களின் புகைப்படங்களும், அவர்கள் மீது எத்தனை வழக்குகள் உள்ளன என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. மிக நீளமான இந்த சுவரொட்டி சென்னை மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அனைவரும் நின்று அந்த சுவரொட்டியை படித்து செல்கிறார்கள். முதலில் கவர்னர் ரவி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வழக்குகள் உள்ள அமைச்சர்களை நீக்கிவிட்டு, தமிழகத்தில் தனது நடவடிக்கையை எடுத்தால் நல்லது என்று விமர்சனம் செய்தபடி சென்றனர்.