Skip to content
Home » வாலிபரை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற வைத்தியர்….. குடந்தையில் பகீர் சம்பவம்.

வாலிபரை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற வைத்தியர்….. குடந்தையில் பகீர் சம்பவம்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மணல்மேடு பகுதி சேர்ந்தவர்  அசோக்ராஜன் (27). சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 11ம் தேதி தீபாவளி பண்டிகைக்காக அசோக்ராஜ் ஊருக்கு வந்திருந்தார். தனது பாட்டி பத்மினி வீட்டில் தீபாவளியை கொண்டாடிவிட்டு மறுநாள் 13-ம் தேதி சிதம்பரத்தில் உள்ள நண்பரை பார்த்துவிட்டு சென்னைக்கு செல்வதாக  பாட்டியிடம் கூறிவிட்டு புறப்பட்டார்.

மறுநாள்  பாட்டி பத்மினி தனது உறவினர் ஒருவர் மூலம் அசோக்ராஜன் செல்போனுக்கு தொடர்புக்கொண்டுள்ளார். ஆனால், அசோக்ராஜன் செல்போன் சுவிட்ச் ஆப் என்று வந்துள்ளது. இதையடுத்து சோழபுரம் போலீசில், கடந்த 15-ம் தேதி பத்மினி புகார் செய்தார். இதன்பேரில், போலீஸார் சோழபுரம் கடைத்தெருவில் உள்ள சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்தனர்.

இதில் அசோக்ராஜன் கீழத்தெரு வழியாக சென்றவர், மீண்டும் திரும்பாதது தெரியவந்தது. இதற்கிடையில், அசோக் ராஜன் வீட்டிற்கு, ஒரு கடிதம் ஒன்று வந்தது. அதில், தனக்கு ஆண்மை இல்லாமல் இருப்பதால் வாழ பிடிக்கவில்லை என அசோக்ராஜன் எழுதியதாக  கூறப்பட்டு இருந்தது. ஆனால், அது அசோக் ராஜன் கையெழுத்து இல்லை என்பது தெரியவந்தது.

மேலும், அசோக்ராஜன் ஊருக்கு வரும் போது, சோழபுரம் கீழத்தெருவை சேர்ந்த சித்த வைத்தியரான கேசவமூர்த்தி (47) என்பவரிடம் சிகிச்சை பெற்றதாக தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கேசவமூர்த்தியும், அசோக்ராஜனும் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த 17ம் தேதி, கேசவமூர்த்தியை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அசோக் ராஜன் தனக்கு ஆண்மை இல்லை என்றும், அதனால் தனக்கு வாழ பிடிக்கவில்லை என கூறி என்னிடம் அழுதார். பின்னர் நான் தஞ்சாவூரில் உள்ள ஒரு டாக்டரிடம் சிகிச்சை பெற அறிவுறுத்தினேன். இதை காரணமாக வைத்து, அசோக்ராஜனை ஹோமோசெக்ஸ்க்கு அழைத்தேன். கடந்த 13-ம் தேதி அவர் வீட்டுக்கு வந்த போது, மீண்டும் அழைத்தேன். அதற்கு அவர் மறுத்தார். அவருக்கு ஆண்மை வீரியம் அதிகரிக்கும் மருந்து கொடுத்தேன்.

அந்த மருந்தை சாப்பிட்ட நிலையில் இறந்தார். அதன் பிறகு, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி, வீட்டின் பின்புறம் புதைத்து விட்டேன் என்று சித்தவைத்தியர் கேசவமூர்த்தி ஒப்புக்கொண்டுள்ளார்.

இதையடுத்து ஆர்.டி.ஓ., பூர்ணிமா, திருவிடைமருதுார் டி.எஸ்.பி., ஜாபர்சித்திக், மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று புதைக்கப்பட்டிருந்த அசோக்ராஜனின் உடலை தோண்டி எடுத்து சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர்.

மேலும், அப்பகுதியில் அண்மைக்காலமாக இளைஞர்கள் சிலர் மாயமானது தொடர்பாக, சித்த வைத்தியர் கேசவமூர்த்தியிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வரும் போலீசார், அவரது வீட்டின் பின்புறம் ஏதேனும் உடல் புதைக்கப்பட்டுள்ளதா என தீவிரமாக ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!