இந்த வருடம் ஆடி மாதம் 2 அமாவாசை வந்துள்ளது. ஆடி 1ம் தேதி(ஜூலை 17) அமாவாசை தினமாக இருந்தது. இன்று ஆடி 31ம் தேதியும் அமாவாசையாகும். எனவே 2 அமாவாசை தினத்திலும் மக்கள் அமாவாசை தினத்துக்கான சடங்குகள், பூஜைகள் நடத்தி வருகிறார்கள்.
தென் கைலாயம் என்று போற்றப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். இங்குள்ள அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் நன்மை கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. குறிப்பாக அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது.
ஆடி அமாவாசை தினத்தையொட்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலையிலேயே பக்தர்கள் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலின் வடக்கு கோபுர வாசல் பகுதியில் இருந்து கிழக்கு ரத வீதி வாசல்
வரையிலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்து நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆடி அமாவாசையையொட்டி ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது.
ராமேசுவரத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் அந்தப்பகுதி முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுல்ள்ளது. 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடலில் நீராடும் பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி கடல் பகுதியிலும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியிலும் இன்று பக்தர்கள் கூட்டம் அதிக அளவில்
காணப்பட்டது. இதுபோல நாகை மாவட்டம் கோடியக்கரை கடற்கரையிலும், பூம்புகார் கடற்கரையிலும் மக்கள் பெருமளவில் திரண்டிருந்து புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
திருச்சி மாவட்டம் திருவரங்கம் அம்மா மண்டபம் காவிரிக்கரையிலும், தஞ்சை மாவட்டம் திருவையாறு புஷ்ப மண்டப படித்துறையிலும், கும்பகோணம் மகாமக குளத்திலும், மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியிலும் இன்று அதிகாலை முதல் மக்கள் திரளாக வந்திருந்து தர்ப்பண சடங்குகள் செய்தனர்.
தூத்துக்குடி துறைமுகம் பகுதியில் இன்று அதிகாைலயிலேயே கடல் 40 மீட்டர் தூரம் உள்வாங்கியது. இதனால் கடலில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் தரைதட்டியது. அமாவாசை என்பதால் கடல் உள்வாங்கியதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.