திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே வேலம்மாள் இன்டர்நேஷனல் மாணவர்களை ஏற்றி சென்ற பள்ளி பேருந்து – கண்டெய்னர் லாரி மோதி விபத்து.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே வேலம்மாள் தனியார் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளி பேருந்தும், கண்டெய்னர் டிரெய்லர் லாரியும் மோதிய விபத்தில், மாணவர்கள் மற்றும் பேருந்து ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
விடுமுறைக்காக சொந்த நாடுகளுக்குச் சென்றிருந்த மாணவர்கள், மீண்டும் பள்ளிக்கு

திரும்புவதற்காக சென்னை விமான நிலையம் வந்துள்ளனர். அங்கிருந்து தனியார் பள்ளிக்குச் சொந்தமான பேருந்தில் மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர்.
சோழவரம் அருகே ஜனப்பன்சத்திரம் கூட்டுச்சாலை பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிரே/அருகில் சென்ற கண்டெய்னர் டிரெய்லர் லாரியுடன் பள்ளி பேருந்து பக்கவாட்டில் மோதியது.
இந்த விபத்தில் பள்ளி பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்ததுடன், வலதுபுற பக்கவாட்டு ஜன்னல் கண்ணாடிகளும் சேதமடைந்தன. பேருந்தின் பக்கவாட்டுப் பகுதியும் பலத்த சேதமடைந்தது.
விபத்தில் பேருந்தில் பயணித்த மாணவர்கள் மற்றும் பேருந்து ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தகவலறிந்து உடனடியாக பள்ளி நிர்வாகம் மாற்றுப் பேருந்தை வரவழைத்தது. காயமடைந்த மாணவர்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார், விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி பேருந்தும் கண்டெய்னர் டிரெய்லர் லாரியும் மோதியதால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
