பீகார் மாநிலத்தில் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி காயமடைந்த இளைஞருக்கு கார்ட்போர்டு அட்டைப்பெட்டியை வைத்து அரசு மருத்துவர்கள் கட்டுப் போட்டுவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞர் உடைந்த காலில் அட்டைப்பெட்டி கட்டுடன் மருத்துவமனை படுக்கையில் உள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
பீகார் மாநிலம், சேர்ந்தவர் குணால் குமார். இவர் கடந்த ஆகஸ்ட் 3 அன்று மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள், உடனடியாக மஞ்சவுல் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.
அங்கு, மருத்துவ ஊழியர்கள் அவரது முறிந்த காலுக்குக் கட்டுப்போட்டனர். அப்போது, உடைபட்ட அவரது காலின் இரு புறமும் பிளஸ்திரிக்கு பதிலாக மருந்து பொருட்களைக் கொண்டு வரும் அட்டைப் பெட்டிகளை வைத்துக் கட்டுப் போட்டுள்ளனர். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன.
இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. அதன்படி, ”எலும்பு முறியும் போது அப்பகுதி அசையாமல் இருப்பது மிகவும் அவசியம். சம்பவத்தன்று மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சை நிபுணரோ அல்லது பிளாஸ்தர் போடும் வசதியோ இல்லாததால், நோயாளிக்கு முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்கு அனுப்பவே அப்போதைக்குக் கிடைத்த அட்டைப்பெட்டியை வைத்துக் கட்டுப்போடப்பட்டது” என்று தெரிவித்துள்ளது.
