தமிழகத்தில் மொத்தம் உள்ள 4,829 டாஸ்மாக் மதுக்கடைகளில் 24,986 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்குக் குறைவான சம்பளமே வழங்கப்படுவதால் மதுபான கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக செய்திகள் வெளியாகின.
மது வகைகள் எது வாங்கினாலும் நிர்ணயிக்கப்பட்ட விலையில் இருந்து பத்து ரூபாய் கூடுதலாக வைத்து விற்கப்படுவதாகவும் காரணம் கேட்டால் மின்சாரம், கட்டிட வாடகை கூலிங் சார்ஜ் என விற்பனையாளர்கள் கூறுவதாகவும் வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் குறிப்பாக தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது நடைபெற்று வருவதாக வாடிக்கையாளர்கள் புகார் கூறி வந்தனர்.
இந்நிலையில் இதைத் தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில் மது பானங்களை கூடுதல் விலைக்கு விற்றால், ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது
இது குறித்து வெளியான சுற்றறிக்கையில்,
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம், மதுபான சில்லறை விற்பனை கடைகளில் நிர்ணயித்த விலையைவிட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்வததாக புகார்கள் தலைமை அலுவலகத்திற்கு வந்த வண்ணம் உள்ளன. கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் பணியாளர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
எனவே கூடுதல் விலைவைத்து விற்பனை செய்யப்படுகின்ற அனைத்து கடைப்பணியாளர்கள் மீது மிக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் இதை தடுக்க தவறும் மாவட்ட மேலாளர்கள் மீதும் உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கப்படுகிறது.
அதன் அடிப்படையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கும் நேர்வுகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த அறிவுரைகளை அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்களும் மாவட்ட மேலாளர்களும் சிறப்பு பறக்கும் படை அலுவலர்களும் தவறாது கடைப்பிடிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அனைத்து மண்டலத்திலுள்ள (Flying Squad Deputy Collectors) பறக்கும் படை துணை ஆட்சியர்கள் தத்தம் மண்டலத்தில் தெரிய வரும் புகார்கள் குறித்தான மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை ஆய்வு செய்து, தவறு செய்யும் கடைப்பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
