தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த டிச.17, 18 ஆகிய தேதிகளில் வரலாறு காணாத கனமழை பெய்தது. கனமழையின் காரணமாக பல இடங்களில் தேங்கிய மழைநீர் காரணமாக மின்சாரம், போக்குவரத்து போன்ற பாதிப்புகள் ஏற்பட்டது.
மழைநீரால் பாதிக்கப்பட்ட இடங்களில் மாநிலப் பேரிடர் மீட்புக் குழு, தேசியப் பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்புத்துறை, காவல்துறையினர் மற்றும் அனைத்து அரசுத் துறைகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த முறையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தூத்துக்குடியில் மாவட்டத்தில் நிவாரண, மீட்பு பணிகளை விரைந்து முடிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் மழை வெள்ள நிவாரணப் பணிகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்து வருகிறது என நடிகர் வடிவேலு பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது; “நிவாரணம் வழங்கும் பணிகளில் தமிழ்நாடு அரசு மிகச்சிறப்பாக செய்து வருகிறது.
மக்களின் வேதனைகளை முதலமைச்சர் உணர்ந்ததால்தான், அமைச்சர்களும் களத்தில் நன்றாக பணி செய்து வருகின்றனர். மழையால் ஏற்படும் உயிரிழப்புகளை வெகுவாக குறைத்தது மிகப்பெரிய விஷயம், அரசை குறை சொல்பவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கட்டும். அமைச்சர் மா.சுப்ரமணியன் போன்ற திறமையானவர்களை தேர்ந்தெடுத்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்குநர் மாரி செல்வராஜ் ஏன் ஆய்வு பணிகளில் ஈடுபடுகிறார் என்று கேட்கிறார்கள். மாரி செல்வராஜ் என்ன அமெரிக்காவுல இருந்தா வந்திருக்கான். அவன் ஊருக்கு போய், அவன் ஊர் மக்களுக்கு உதவி செய்யுறதுல இவனுங்களுக்கு என்ன பிரச்சனை” என்றார்.