நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி வருகிறது. அரசியலுக்கு வருவதாக அவர் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், அவரது இயக்கம் மற்றும் அவரது செயல்பாடுகளால் விரைவில் விஜய் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள், மத்தியில் எழுந்துள்ளது-
சென்னை அடுத்த பனையூரில் உள்ள அலுவலகத்தில் இயக்க நிர்வாகிகளை அவ்வப்போது சந்திக்கும் விஜய், இயக்கத்தை விரிவுபடுத்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அவரது அறிவுறுத்தலின்படி, அம்பேத்கர் பிறந்தநாளன்று அவரது சிலைக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இப்தார் நிகழ்ச்சிகளை நடத்தினர். கடந்த மாதம் 28-ம் தேதி உலக பட்டினி தினத்தில் 234 தொகுதிகளிலும் ‘தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்’ திட்டம் மூலம் ஏழைகளுக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் மதிய உணவு வழங்கினர்.
கடந்த மாதம் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை நடிகர் விஜய் சந்தித்து ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார். அப்போது ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என மாணவர்கள் மத்தியில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் விஜய் கவனம் செலுத்த போவதில்லை எனவும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள 2026-ம் ஆண்டில் மாநாடுகள் நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், நடிகர் விஜய் பனையூர் இல்லத்தில் மாவட்ட பொறுப்பாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று திருவாரூர் உள்பட சில மாவட்ட நிர்வாகிகளை வரவழைத்து ஆலோசித்து வருகிறார். எனவே அவர் புதிய அரசியல் கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
3 நாட்களுக்கு மாவட்ட பொறுப்பாளர்களுடன் பனையூர் இல்லத்தில் ஆலோசனை நடத்த உள்ளார்.இதில் 234 தொகுதிகளை சேர்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள். இன்று காலை முதலே தொகுதி பொறுப்பாளர்கள் பனையூர் இல்லத்தில் குவியத்தொடங்கினர். போட்டோவுடன் கூடிய அடையாள அட்டையுடன் வரும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்டுகிறது. அதன்படி விஜயுடன் தொகுதி பொறுப்பாளர்கள், அணி ரிர்வாகிகள் என 300 பேர் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர்.