அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்தது. அப்போது கட்சியில் ஒற்றை தலைமை கொண்டு வருவது உள்பட பல தீர்மானங்கள் இயற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை எதிர்த்தும், அதன் பின்னர், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்தும் சென்னை ஐகோர்ட்டில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த வழக்குகளை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், 4 பேரும் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் விசாரித்தனர். அப்போது இருதரப்பிலும் மூத்த வக்கீல்கள் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், கடந்த ஜூன் 28-ந்தேதி இருதரப்பினரும் எழுத்துபூர்வமான வாதங்களை தாக்கல் செய்தனர். இதையடுத்து இந்த மேல்முறையீட்டு வழக்குகளின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் இந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அதன் விவரம் வருமாறு:
அதிமுக பொதுக்குழு மற்றும் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதிகள் ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பினர் 4 பேரின் மனுக்களை தள்ளுபடி செய்தனர். பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடையில்லை. மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்படுகிறது. பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், எடப்பாடி தேர்வுக்கு தடை விதிக்க முடியாது.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இந்த தீர்ப்பின் மூலம் ஓபிஎஸ் தரப்பினருக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் எடப்பாடிக்கு இது சாதகமானதாக அமைந்துள்ளது. இந்த தீர்ப்பு வெளிவந்ததும் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். சென்னை தலைமை அலுவலகம் முன்பும் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி தங்கள் வெற்றியை அதிமுகவினர் கொண்டாடினர்.