அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பித்துக் கொள்வதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்குமான விண்ணப்பப் படிவங்கள் தலைமைக் கழகத்தில், 5.4.2023 முதல் விநியோகிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் 4.5.2023 முதல் பெறப்பட்டு வருகின்றன.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்த்திட வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து செயல்பட்டு வந்த நிலையில், தற்போது வரையில் 2 கோடியே 44 ஆயிரத்து 400 பேர் உறுப்பினர்களாக சேர்வதற்கு விண்ணப்பித்துள்ளனர்.
கழகத்தில் உறுப்பினர்களாக சேருவதற்கும், உறுப்பினர் பதிவை புதுப்பிப்பதற்குமான காலக் கெடுவை நீட்டித்துத் தருமாறு, 4.8.2023 அன்று தலைமைக் கழகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது, மாநாட்டுக் குழு உறுப்பினர்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, 17.8.2023 மாலை 5 மணிவரை நீட்டிக்கப்படுகிறது. இதுவே இறுதியான வாய்ப்பாகும்.
புதிய உறுப்பினர் உரிமைச் சீட்டுகளைப் பெற்றுள்ள கழக உடன்பிறப்புகள் மட்டுமே, கழகப் பொறுப்புகளில் நியமனம் செய்யப்பட்டு பணியாற்றுவதற்கும், கழக அமைப்புத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கும், வாக்களிப்பதற்கும் தகுதி உடையவர்கள் ஆவார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.