கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. நகராட்சி தலைவராக மெஹரீபா பர்வீன் அஷ்ரப் அலி என்பவரும், துணைத்தலைவராக அருள்வடிவு என்பவரும் பதவி வகித்து வருகின்றனர். நேற்று நகராட்சி அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த மேட்டுப்பாளையம் அதிமுக எம்எல்ஏ செல்வராஜ், கமிஷனர் அமுதாவின் அறைக்குச்சென்று அவரிடம் வளர்ச்சிப்பணிகள் குறித்து கேள்வி கேட்டுள்ளார். அப்போது, அவர் கமிஷனரை ஒருமையில் பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் கமிஷனர் பயந்து அழுது கொண்டு இருந்தார்.
இந்நிலையில் குடியரசு தினத்தையொட்டி விழாவினை கொண்டாடுவது குறித்து பேசுவதற்காக நகராட்சி தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்டோர் கமிஷனர் அறைக்கு சென்றனர். அப்போது, கமிஷனரை சமாதானப்படுத்தினர். அப்போது, எம்எல்ஏ செல்வராஜ், ‘‘நான் பேசிக்கொண்டிருக்கும்போது நீ எதற்கு உள்ளே வந்தாய்?’’ என ஒருமையில் நகராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவரை பேசியுள்ளார். இதனை கண்ட திமுக கவுன்சிலர்கள் அங்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த மேட்டுப்பாளையம் டிஎஸ்பி பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பையும் சமாதானப்படுத்தினர். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். பெண் என்றும் பாராமல் ஒருமையில் பேசி மிரட்டிய அதிமுக எம்எல்ஏ மீத ஆணையர் அமுதா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் அதிமுக எம்.எல்.ஏ. செல்வராஜ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.