மக்கள் தான் இங்கு நீதிபதிகள், மக்களுக்காகத் தான் ஆட்சி, எனவே மக்கள் வழங்கிய முடிவை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்தார்.
தமிழக சட்டசபை தேர்தலில் எழுச்சியுடன் முன்வந்து ஜனநாயகக் கடமையாற்றிய அனைத்து மக்களுக்கும் எனது வணக்கத்தையும், நன்றியையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் தான் இங்கு நீதிபதிகள். மக்களுக்காகத் தான் ஆட்சி. எனவே, மக்கள் வழங்கிய முடிவை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்.
ஜெயலலிதாவின் வழியில், இந்தப் பின்னடைவில் இருந்து விரைவில் மீண்டு வருவோம். அதிமுக தலைமையிலான தேஜ கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு பிரசாரம் செய்த பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களுக்கு மனமார்ந்த நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
நம் கூட்டணியின் வெற்றிக்கு அயராது உழைத்த கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கு நன்றி; Last but not least என்பது போல, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு அயராது உழைத்திட்ட கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நடந்து முடிந்த சட்டசபை பொதுத் தேர்தலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஓட்டளித்த, வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் நல்லாசியுடன் பீனிக்ஸ் பறவை போல், அதிமுக மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பும். ‘எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அதிமுக மக்களுக்காகவே இயங்கும்’ என்று சூளுரைத்த ஜெயலலிதாவின் வார்த்தைகளை மெய்ப்பிக்கும் வகையில், அதிமுக மக்கள் பணியில் என்றென்றும் ஈடுபடும் என்பதை உறுதியோடு தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு இபிஎஸ் கூறியுள்ளார்.
