கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் ஒரே கல்லில் 15 டன் எடையில் செதுக்கப்பட்ட 11 அடி உயர கிருஷ்ணர் சிலை, திருநெல்வேலி டவுனில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கோவிலில் நிறுவுவதற்காக லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
புவிசார் குறியீடு பெற்ற மயிலாடி சிற்பக்கூடங்களில் இருந்து தயாரிக்கப்படும் சாமி சிலைகள், உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்குத் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மயிலாடி சேந்தன்புதூர் பகுதியைச் சேர்ந்த சிற்பி சுப்பிரமணியன் ஆசாரியின் சிற்பக்கூடத்தில், திருநெல்வேலி டவுனில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கிருஷ்ணசாமி கோவிலுக்காக இச்சிலை வடிவமைக்கப்பட்டது.
ஒரே கல்லில் 11 அடி உயரமும், 3½ அடி அகலமும், 15 டன் எடையும் கொண்ட இக்கிருஷ்ணர் சிலையை, கடந்த 8 மாதங்களாகச் சிற்பத் தொழிலாளர்கள் இரவு பகலாகத் த்ரூபமாக வடித்துள்ளனர். சிலையை நெல்லைக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு, மயிலாடியில் உள்ள சிற்பக் கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கிருஷ்ணர் சிலைக்குச் சிறப்புப் பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடத்தப்பட்டன.
அதன்பின்னர், கிரேன் உதவியுடன் 10 சக்கரங்கள் கொண்ட கனரக லாரியில் சிலை பத்திரமாக ஏற்றப்பட்டுத் திருநெல்வேலிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஒரே கல்லில் பிரம்மாண்டமாகப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த அற்புதச் சிலையை அங்குத் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வியப்புடன் கண்டு தரிசித்தனர்.
