இந்திய அரசால் வழங்கப்படும் உயர்ந்தபட்ச சிவிலியன் விருது பாரத ரத்னா. இந்த விருது முதன் முதலாக தமிழகத்தை சேர்ந்தவருக்கு தான் கிடைத்தது. தற்போதைய கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள தொரப்பள்ளி என்ற கிராமத்தில் பிறந்து சேலம் நகராட்சித் தலைவராக இருந்து இந்தியாவின் உயர்ந்த பதவியான கவர்னர் ஜெனரல் பதவி வகித்த ராஜாஜி தான் முதன் முதலாக பாரத ரத்னா விருது பெற்றவர். அதன் பிறகு விஞ்ஞானி திருச்சியை சேர்ந்த சர். சி.வி. ராமன், பெருந்தலைவர் காமராஜர், எம்.ஜி.ஆர். அப்துல் கலாம், சி. சுப்பிரமணியம், எம்.எஸ். சுப்புலட்சுமி என இதுவரை இந்தியாவில் 52 பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
1954ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. பொதுச் சேவைக்காக அல்லது இலக்கியம், அறிவியல், கலை அல்லது எந்தவொரு மனித முயற்சியிலும் மிக உயர்ந்த செயல்திறனுக்காக சிறப்பாகப் பணியாற்றுபவர்களுக்கு இது வழங்கப்படுகிறது . ஒரு வருடத்தில் அதிகபட்சம் மூன்று நபர்கள் மட்டுமே இந்த மதிப்புமிக்க விருதைப் பெற முடியும் . பிரதமர் பரிந்துரையில் ஜனாதிபதி இதை வழங்குவார்.
2019க்கு பிறகு கடந்த 4 வருடமாக பாரத ரத்னா யாருக்கும் வழங்கப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு 5 பேருக்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவுக்கும் இன்று விருது அறிவிக்கப்பட்டது. அவர் பிறந்த மாநிலமான தெலங்கானாவில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இன்று வெளிவந்துள்ள கருத்து கணிப்பிலும் மீண்டும் அங்கு காங்கிரஸ் வெற்றி பெறும் என தெரியவந்துள்ள நிலையில் நரசிம்மராவுக்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டது.
இதுபோல உ.பி. முன்னாள் முதல்வரும், முன்னாள் பிரதமருமான சரண்சிங்குக்கும் இன்று பாரத ரத்னா அறிவிக்கப்பட்டுள்ளது. சரண்சிங்கின் மகன் அஜித் சிங் மத்திய காங்கிரஸ் அரசில் அமைச்சராக இருந்தார். அவரது மறைவுக்கு பின்னர் அஜித்சிங் மகன் ஜெயந்த் சிங் உ.பியில் ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சியை நடத்தி வந்தார்.
தற்போது அவர் உ.பியில் அகிலேஷ் யாதவுடன் கூட்டணி அமைத்திருந்தார். இந்த நிலையில் இன்று அவர் அந்த கூட்டணி்யை முறித்துக்கொண்டு பாஜக கூட்டணியில் இணைந்து விட்டார். அதைத்தொடர்ந்து சரண்சிங்குக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு சீட் கிடைக்காது என்ற கருத்து கணிப்பு வெளியான நிலையில், இன்று தமிழ்நாட்டை சேர்ந்த வேளாண் விஞ்ஞானிஎம்.எஸ். சுவாமிநாதனுக்கு பார ரத்னா விருது அறிவித்து உள்ளது. இதற்கு எம்.எஸ். சுவாமிநாதன் மகள் டாக்டர் சவுமியா மத்திய அரசுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அடுத்ததாக திமுகவை உருவாக்கிய முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவுக்கும் இந்த விருது வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.