கரூர் , தொட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் மூன்று வேலைகளில் தண்ணீர் அருந்த “வாட்டர் பெல்” திட்டம் பள்ளியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் நேரம் தவறாமல் தண்ணீர் குடிப்பதை ஊக்குவிக்க, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ‘வாட்டர் பெல்’ திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பள்ளிகளில் குழந்தைகள் அதிக நேரம் செலவிடுகின்றனர். வெயிலின் தாக்கம் மற்றும் விளையாட்டு நேரங்களில் உடலில் அதிக அளவு நீர்ச்சத்து குறைகிறது . எனவே, அவர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு, நீர்ச்சத்து குறைவை தடுக்கும் நோக்கத்துடன், பள்ளி நேரத்திலேயே பள்ளி மாணவ, மாணவிகள் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் வகையில்,
வாட்டர் பெல் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் காலை 11 மணி, மதியம் 1 மணி மற்றும் பிற்பகல் 3 மணிக்கு என நாள் ஒன்றுக்கு மூன்று முறை செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் கரூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளிகளில் செயல்பாடுக்கு வந்துள்ளது. குறிப்பாக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள தொட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்கள் வாட்டர் பெல் திட்டத்தின் மூலம் மூன்று வேலைகளிலும் தண்ணீர் அருந்தி வருகின்றனர். இதனால் மாணவர்கள் சரியான நேரத்தில் தண்ணீர் அருந்துவதற்கும், நீர் சத்தை அதிகரிப்பதற்கும் உதவியாக இருக்கிறது.