இந்திய நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் தேர்தல் ஆணையத்தின் மூலம் நடைபெற்று வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் வீடியோ மூலம் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் இன்று தொடங்கி வைத்தார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா வாகனத்தின் முன்பு 100 சதவீத வாக்களிப்பு குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கரை ஒட்டினர். மேலும் காசுக்கு வாக்களிக்க மாட்டோம் என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோ படமும், அவசியம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்த வீடியோ படமும் காட்சியிடப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா பார்வையிட்டார். மாவட்டம் முழுவதும் பொது மக்களுக்கு வீடியோவை ஒளிபரப்பி விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட செய்தி மற்றும் பொதுமக்கள் தொடர்பு அலுவலர் சுருளிராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.