Skip to content
Home » அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு … இன்று மாலை தீர்ப்பு

அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு … இன்று மாலை தீர்ப்பு

அமலாக்கத்துறை நேற்று முன் தினம் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில்  சோதனை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக நள்ளிரவில்  அமைச்சர் கைது செய்யப்பட்டார். 17 மணி நேரம் தொடர்ந்து அமலாக்கத்துறையினர் கடுமையான டார்ச்சர் செய்ததால்,  அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. வலியால் துடித்து மயங்கும் நிலைக்கு உள்ளான அமைச்சரை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு உடனடியாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது இதயத்துக்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறிய நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்தனர். ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

நேற்று  மாலை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வந்து நேரில் விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி அமைச்சர் செந்தில் பாலாஜியை ஜூன் 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

பினாமி சொத்துகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பினாமிகளின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன என்றும், அந்த குற்றச்சாட்டின் படி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை சார்பில் தாக்கல் செய்த மனுவில் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அவர் ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த மனுக்களை நீதிபதி எஸ்.அல்லி நாளை(இன்று) விசாரிப்பதாக கூறி வழக்கை ஒத்திவைத்தார்.

இந்த நிலையில் இன்று காலை 10.45 மணி அளவில் நீதிபதி அல்லி இந்த வழக்கில்  கூறியதாவது: 28ம் தேதி வரை  நீதிமன்ற காவல் வழங்கப்பட்டு விட்டதால் அதை ரத்து செய்ய முடியாது.   எனவே நீதிமன்ற காவலை  நிராகரிக்க கோரிய மனு  ஏற்கதக்கது அல்ல என்பதால் அந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று மாலை 3.30 மணிக்கு அளிக்கப்படும் என தீர்ப்பை ஒத்திவைத்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளதால் அவருக்கான பாதுகாப்பு பொறுப்பை நேற்றிரவு 10 மணியளவில் சிறைத்துறை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர். சிறைத்துறையில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 10 போலீசார் செந்தில் பாலாஜி சிகிச்சை பெறும் வார்டு முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். துணை ராணுவத்தினரின் பாதுகாப்பு உடனடியாக வாபஸ் பெறப்பட்டது.  இந்தநிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறை கைதிக்கான பதிவேடு எண் வழங்கப்பட்டுள்ளது.

சிறை கைதிகளுக்கு வழங்கப்படும் எண், சிறை கைதிக்கு உள்ள விதிமுறைகள் செந்தில் பாலாஜிக்கு பொருந்தும் .அமைச்சர் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டை சுற்றி ஏராளமான ஆயுதப்படை காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  அமைச்சர் செந்தில்பாலாஜியை பார்வையாளர்கள் பார்க்க புழல் சிறைத்துறை அதிகாரிகளின் ஒப்புதலோடு அனுமதிக்கப்படுவார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!