மகாவிஷ்ணுவின் அவதாரம் ஸ்ரீ வைகுண்ட சுவாமி அருளிய சனாதான வரலாறு என்ற புத்தகத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று வெளியிட்டார். பின்னர் உரையாற்றிய கவர்னர் ரவி, ஆ ங்கிலேயர்கள் தனது ஆட்சிக் காலத்தில் சனாதன தர்மத்தை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டனர். திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானது. ஜி.யு.போப் போன்றவர்கள் பள்ளிப்படிப்பை கூட முடிக்காதவர்கள். மக்களை கிறித்துவ மதத்திற்கு மாற்றவே அவர்கள் இந்தியா வந்தனர்.
அய்யா வைகுண்டர் தோன்றிய சமூக காலகட்டம் சனாதன தர்மத்திற்கு பாதிப்பு ஏற்பட்ட காலகட்டம். சனாதன தர்மத்தை காக்கவே 192 ஆண்டுகளுக்கு முன் அய்யா வைகுண்டர் தோன்றினார். நாராயணனின் அவதாரம் அய்யா வைகுண்டர். வைகுண்டரின் கனவை நனவாக்கும் பணியில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார், என்றார்.
கவர்னாின் இந்த பேச்சுக்கு கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டர்பதியின் தலைவர் பாலபிரஜாபதி அடிகாளார் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து பாலபிரஜாபதி அடிகளாகர் கூறியதாவது:
வரலாற்றை திரித்து கவர்னர் பேசுகிறார். ஆரிய கோட்பாட்டுக்கு பலம் சேர்க்கும் வகையில் கவர்னர் பேசி உள்ளார். உருவ வழிபாடு, மொழி பேதம், ஆண், பெண் பேதம் , சாதிபேதம் அய்யா வைகுண்டரிடம் இல்லை. எல்லா புராணங்களிலும் வரலாறு திரிக்கப்பட்டுள்ளது என்று வைகுண்டர் கூறினார். கவர்னர் பேச்சு வருத்தம் அளிக்கிறது. அவர் தெரியாமல் பேசவில்லை. திரித்து பேசுகிறார். கவர்னர் அவர் வேலையை மட்டும் பார்த்தால் போதும், மத பிரச்னைகளை பேச வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கவர்னரின் பேச்சு, அய்யா வைகுண்டரின் பக்தர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அய்யா வைகுண்டரின் பக்தர்கள் கூறியதாவது:
“ஏடுதந்தேன் உன்கையில் எழுத்தாணியும் கூடத் தந்தேன்
பட்டங்களும் பட்டயமும் தந்து பகை தீர்ந்தேன் என் மகனே..” என அய்யா வைகுண்டர் வலியுறுத்துவது எதனைத் தெரியுமா? சூத்திரன் படித்தால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என சொன்ன சனாதனத்துக்கு எதிரான அய்யா வைகுண்டரின் சண்டமாருத முழக்கம் இது என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும்.. புரிந்தும் புரியாமல் பொய்யும் புனைபுரட்டுமாய் சனாதனம் பேசும் சக்திகளுக்கு எப்படி புரியும்? என்பதுதான் அய்யா வைகுண்டர் பக்தர்களின் ஆவேச கோபம்.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.