Skip to content
Home » ஒகேனக்கல்லில் வெள்ளம்….. சுற்றுலா பயணிகளுக்கு தடை

ஒகேனக்கல்லில் வெள்ளம்….. சுற்றுலா பயணிகளுக்கு தடை

கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தற்போது அங்கு கனமழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 22 ஆயிரத்து 600 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் இருந்து  திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது. நேற்று மாலை நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 19 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பரிசல் இயக்க ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் முகாமிட்டு நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் அருவிகள் மற்றும் கரையோரப் பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!