கா்நாடக அரசு ஆண்டு தோறும் தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி காவிரி நீர் தமிழகத்திற்கு தர வேண்டும். ஆனால் இந்த ஆண்டு போதிய அளவு கர்நாடகத்தில் மழை இல்லை எனக்கூறி தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்ததது. இதனால் தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிட்டது. அத்துடன் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து மண்டியா உள்ளிட்ட காவிரி படுகை பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளன. கடந்த 23-ந் தேதி மண்டியாவில் முழு அடைப்பு நடத்தப்பட்டது. இந்த நிலையில் கர்நாடக நீர் பாதுகாப்பு குழு, பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தது. அதன்படி பெங்களூருவில் இன்று (செவ்வாய்க்கிழமை) முழு அடைப்பு நடக்கிறது. இந்த முழு அடைப்பு போராட்டம் காலை 6 மணிக்கு தொடங்கியது.
மாலை 6 மணி வரை பந்த் நடக்கிறது. முழு அடைப்பையொட்டி பஸ், ஆட்டோ, வாடகை கார்கள், டாக்சிகள் அதிக அளவில் இயங்கவில்லை. திரையரங்குகள், கடைகள், வணிக வளாகங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் செயல்படவில்லை. அரசு-தனியார் பள்ளி-கல்லூரிகள் பெரும்பாலும் இயங்கவில்லை.
இந்த முழுஅடைப்பு காரணமாக பள்ளிகளில் இன்று நடைபெற இருந்த காலாண்டு தேர்வு வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. மேலும், அசம்பாவித சம்பவங்களை தடுக்க பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.