விருந்து என்றால் அறுசுவை உணவு என்ற நிலை மாறி பிரியாணியும், இரவு நேர சிற்றுண்டி என்றால் இட்லி, தோசை சப்பாத்தி என்ற நிலை மாறி புரோட்டா மற்றும் பாஸ்ட் புட் அயிட்டங்களை விரும்பு சாப்பிடுகின்றனர். அதனால், இரவு நேர ரோட்டோர கடைகளில் புரோட்டா முக்கியத்துவம் பெறுகிறது. இது பெருநகரம், நகரம் என்று மட்டுமல்ல, கிராமங்களிலும் இன்று புரோட்டா தினசரி உணவு வகைகளில் ஒன்றாகிவிட்டது.
ஆனால் எல்லா புரோட்டக்கடைகளிலும் ருசி ஒரே மாதிரியாக இருப்பதில்லை. கடைக்கு கடை டேஸ்ட் வித்தியாசப்படுகிறது. எனவே தங்களுக்கு பிடித்தமான புரோட்டா கடைகளில் மக்கள் விரும்பி வாங்குகிறார்கள். இதனால் , புரோட்டா மாஸ்டர்களுக்கு தற்போது கிராக்கி ஏற்பட்டுள்ளது.
மக்களின் மனநிலையை நன்கு புரிந்து கொண்ட திருச்சி புரோட்டா மாஸ்டர் ஒருவர், புரோட்டா தயாரி்ப்பதற்கு பயிற்சி பட்டறை நடத்தி வருகிறார். அவரது பெயர் முகமது மைதீன் . சக்சஸ் புரோட்டா பயிற்சி மையம் என்ற பெயரில் பயிற்சி மையம் நடத்தி வருகிறார்.
புரோட்டா பயிற்சி மையம் குறித்து முகமது மைதீன் கூறியதாவது:
புரோட்டா மற்றும் சைனீஸ் உணவு தயாரிப்பு பற்றி தெரிந்து கொள்ள அதிகமானோர் ஆர்வம் காட்டுகின்றனர். அதனால், புரோட்டா, சப்பாத்தி, சால்னா, வெங்காய சட்னி தயாரிக்க இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஓட்டல்களில் புரோட்டா மாஸ்டர் தேவை அதிகம் இருப்பதால், இளைஞர்கள், படித்தவர்கள், வெளி நாட்டு வேலைக்கு செல்பவர்கள் இங்கு பயிற்சி பெற்றுச் செல்கின்றனர். இது வரை, இந்த மையத்தில் 500க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்றுச் சென்றுள்ளனர்.
ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ப்ரியன் என்பவர் கூறியதாவது:
உணவு தயாரிப்பில் ஆர்வம் இருப்பதால், வீட்டிலேயே பல உணவு வகைகளை தயாரிக்கும் பழக்கம் உண்டு. தென் இந்திய உணவு வகைகள், சைனீஸ் உணவுகளுக்கு வெளி நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால், முறையான பயிற்சி கிடைக்கவில்லை. அதனால், இங்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, பயிற்சி பெற வந்துள்ளேன். 20 நாட்கள் பயிற்சி எடுத்ததில் ஓரளவு தயாரிப்பு வழிமுறைகளை கற்றுக் கொண்டு விட்டேன், என்றார்.
புரோட்டா ,வீச்சு புரோட்டா முட்டை லாபா உள்ளிட்ட புரோட்டாவில் பல்வேறு விதமான வகைகளை தயாரிக்க பயிற்சி கொடுக்கப்படுகிறது. சிலர் அங்கே தங்கி இருந்து மொறு மொறு புரோட்டாவை போட்டு கற்று கைதேர்ந்த புரோட்டா மாஸ்டராக செல்வதாக உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.