முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்களும் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற முத்துக்குமரன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய இன்றைய தினம் வருகை தந்தார். திருச்செந்தூர் கோவிலுக்குள் சென்ற அவர் மூலவர், சண்முகர், வள்ளி தெய்வானை, பெருமாள், தட்சிணாமூர்த்தி மற்றும் சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகியோரை வணங்கினார். அதன்பிறகு மகா மண்டபத்தில் சாஸ்டாங்கமாக
விழுந்து வணங்கினார். அதைத் தொடர்ந்து அங்கேயே சிறிது நேரம் தியானத்தில் ஈடுபட்டார். கோவிலில் தரிசனம் முடித்து வெளியே வந்த முத்துக்குமரனுடன் பக்தர்கள், பொதுமக்கள், கோவில் பணியாளர்கள் நின்று புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.
அதைத் தொடர்ந்து விடுதிகள் அருகே வந்த போது முத்துக்குமரனை கண்ட பக்தர்கள் தங்களது குழந்தைகளை உடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். எந்தவித தயக்கமும் காட்டாமல் குழந்தைகளை தூக்கி வைத்துக் கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு தான் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தேன். திருச்செந்தூர் முருகன் அருளால் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் வெற்றி பெற்றுள்ளேன். அதனால் தான் இன்று முருகனுக்கு நன்றி கூறுவதற்காக திருச்செந்தூர் வந்துள்ளேன் என்று கூறிச் சென்றார்.