டில்லியில் கடந்த 19-ம்தேதி நடந்த இண்டியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தலாம் என்று திரிணமூல், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் பரிந்துரை செய்தன. இதை பல கட்சிகள் ஆமோதித்தன. ஆனால் இந்த விவகாரத்தில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கடும் அதிருப்தி அடைந்ததாக தகவல் வெளியானது. இதை உறுதி செய்யும் வகையில் ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர்கள், கார்கேவை கடுமையாக விமர்சித்தனர். இந்தநிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சில நாட்களுக்கு முன்பு நிதிஷ் குமாரிடம் தொலைபேசியில் பிரதமர் வேட்பாளர் விவகாரம் குறித்து பேசியதாக தகவல்கள் வெளியாகின.
இந்த சூழலில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி, பீகார் தலைநகர் பாட்னாவில் நிதிஷ் குமார் நேற்று மரியாதை செலுத்தினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: மறைந்த தலைவர் வாஜ்பாயை மிகவும் மதிக்கிறேன். எனது வாழ்நாள் முழுவதும் அவருக்கு மரியாதை செய்வேன். இண்டியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் வேட்பாளராக கார்கே பெயர் முன்மொழியப்பட்டதில் எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. இண்டியா கூட்டணியில் நான் எந்த பதவியையும் விரும்பவில்லை. கூட்டணியில் தொகுதி பங்கீட்டை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.