புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள ராப்பூசல் உடையாம்பட்டியைச் சேர்ந்த அந்தோணி சாமி மகன் புதுமை ராஜா (39). இலுப்பூர் மேட்டு சாலையில் பேக்கரி கடை நடத்தி வரும் இவர் மற்றும் இவரது உறவினரான அதே ஊரைச் சேர்ந்த மனோகர் தாஸ் மகன் ஜோஸ்வா ரென்சன்(13) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் இலுப்பூரில் இருந்து விராலிமலை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த மலைக்குடிபட்டி ஆலிக்காட்டை சேர்ந்த மூக்கன் மகன் பழனிசாமி (22) ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் சீத்தப்பட்டி அருகே புதுமை ராஜா வாகனத்தின் மீது மோதியதில் நிகழ்விடத்திலேயே பழனிச்சாமி பலியானார் இதனையடுத்து அவ்வழியே சென்றவர்கள் புதுமை ராஜா மற்றும் ஜோஸ்வா ரென்சனை மீட்டு விராலிமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும், அங்கு சிகிச்சை பலனின்றி புதுமை ராஜா இறந்துவிட்டார். ஜோஸ்வா ரென்சன் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து இலுப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.