தென்னக ரயில்வே திருச்சி கோட்டம் சார்பில், கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில், 76ம் ஆண்டு குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருச்சி கோட்ட மேலாளர் அன்பழகன் தேசியக்கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். ரயில்வே பாதுகாப்புப் படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். ரயில்வே பாதுகாப்புப் படையினர் சார்பில் இருசக்கர வாகனத்தில் பல்வேறு சாகசங்கள் நிகழ்த்தப்பட்டன. ரயில்வே பயணத்தின் போது பயணிகள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இவ்விழாவில் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகள் கூட்டமைப்பின் (SGFI), பேட்மிட்டன் விளையாட்டில் சிறப்பிடம் பெற்ற, திருச்சி பொன்மலை கேந்திரிய வித்யாலயா மாணவ, மாணவிகள் பவதாரணி, கிருத்திகா, சாத்வீகா, குருசபரி, சஞ்சய், ரிபுதாமன், கிரிஷ் ஆகியோரை, கோட்ட மேலாளர் அன்பழகன் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில், கூடுதல் கோட்ட மேலாளர் செல்வன், ரயில்வே பாதுகாப்பு படை திருச்சி கோட்ட முதன்மை பாதுகாப்பு ஆணையர் அபிஷேக் சிங்வி, ரயில்வே அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்றனர். கடந்த மாதம் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற SGFI என்பது, School Games Federation of India (ஸ்கூல் கேம்ஸ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா) விளையாட்டுப்போட்டிகளில் திருச்சி பொன்மலை கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்கம், வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட பதக்கங்களை வென்றனர்.

