தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த தனக்கோடி என்பவரின் மகன் செல்வக்குமார் (47). தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டி அருகே கரியப்பட்டியை சேர்ந்த கருப்பையா என்பவரின் மகன் சுப்பு (எ) சுப்பிரமணியன். இவர் பூதலூர் ஒன்றியக்குழு துணை பெருந்தலைவர். அமமுகவில் இருந்த இவர் தற்போது அதிமுகவிற்கு மாறியுள்ளார்.
கடந்த 12.5.2014ம் ஆண்டு செல்வக்குமாரிடம் தனது சொந்த தேவைக்காக சுப்பிரமணியன் ரூ.20 லட்சம் கடனாக வாங்கியுள்ளார். இதையடுத்து கடந்த 05.03.2021ம் தேதியிட்டு ரூ.10 லட்சத்திற்கு ஒரு காசோலையும், 09.04.2021ம் தேதியிட்டு ரூ.10 லட்சத்திற்கு ஒரு காசோலை என மொத்தம் ரூ.20 லட்சத்திற்கு 2 காசோலைகளை சுப்பிரமணியன், செல்வக்குமாரிடம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து செல்வக்குமார் அந்த காசோலைகளை தனது வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். அப்போது வங்கி கணக்கில் பணம் இல்லை என்று காசோலை திரும்பி வந்துள்ளது. இதுகுறித்து செல்வக்குமார், சுப்பிரமணியனிடம் பலமுறை கேட்டும் சரியான பதில் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து செல்வக்குமார் தஞ்சை விரைவு நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி விசாரித்து சுப்பிரமணியனுக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு கூறினார். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு மாதத்திற்குள் புகார்தாரருக்கு இழப்பீடாக ரூ.20 லட்சம் செலுத்த வேண்டும். தவறினால் இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.