Skip to content
Home » சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை….. பல்கலை தேர்வு ரத்து

சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை….. பல்கலை தேர்வு ரத்து

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் மழை கொட்டித்தீர்த்தது. அசோக் நகர், மாம்பலம், கிண்டி, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், எழும்பூர், கோடம்பாக்கம், வியாசர்பாடி உள்ளிட்ட சென்னையில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால், சாலைகளில் சில பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதியடைந்தனர். அத்துடன், வாகன ஓட்டிகளும் அவதியடைந்தனர்.ஆவடி போலீஸ் நிலையத்தில் மழை நீர் புகுந்தது.  இதை அறிந்த முன்னாள் அமைச்சர் நாசர்  போலீஸ் நிலையம் உள்ளிட்ட வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார்.

சாலைகளில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகளில் தற்போது மழைநீர் தேங்கவில்லை என்றும், சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து சீராக நடைபெற்று வருகிறது என்றும் சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. மேலும், நேற்று இரவு பெய்த கனமழையால், மழைநீர் தேங்கிய 145 இடங்களில், 68 இடங்களில் தற்போது முழுமையாக மழைநீர் வெளியேற்றப்பட்டுள்ளது என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்றும்  சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக  இன்று சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது.  இன்று நடைபெற இருந்த பல்கலைக்கழக தேர்வு ரத்து செய்யப்பட்டது.

சென்னையில் நேற்று இரவு பெய்த மழை காரணமாக  பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சி  அளிக்கிறது. மீனம்பாக்கத்தில் அதிக அளவாக 26 செ.மீ. மழை பதிவானது.  ஆவடியில் 19 செ.மீ,   கொளத்தூர் 15 செ.மீ,  பொன்னேரி 14 செமீ மழை பதிவாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!